உண்மை கசக்கிறதுபொய் இனிக்கிறது

உண்மைக்கும் பொய்மைக்கும்
தினம் என்னுள்ளே ஆயிரம் போர்
என் நம்பிக்கைகளே அதற்குப் பலம் 
சேர்க்கும் சோறு

உள்ளதை உள்ளபடி பார்க்கிறேனா ?
அல்லது என் நம்பிக்கைகளுக்கு 
ஏற்றவாறு அதை மாற்றுகிறேனா ?

எங்கிருந்து வருகிறது 
என் நம்பிக்கைகள் ?
பிறர் கூற வருகிறதா ?
என் மதம் தான் தருகிறதா ?
படிக்கும் புத்தகத்தால் வளர்கிறதா ?

என் நம்பிக்கைகளைப் பகுத்தறிய வேண்டும்
அதன் வேர்கள் எங்கேயென்று நான் 
உணர வேண்டும்

உண்மை கசக்கிறது
பொய் இனிக்கிறது
நான் வாழ நிறைய பொய் தேவை
அதனாலே உண்மையைத் 
தேடும் என் பயணம்
பொய் என்னும் வாகனத்திலே !

சலிப்பே இல்லாத உழைப்பு

ஆதவன்  தினம் உதித்து
பின் மறைவதும்.

கடல் அலைகள்
ஓயாமல் எழுவதும் 
பின் வீழ்வதும்

தினம் காலைத் தன் கூடவிட்டுச்
செல்லும் பறவை
மாலைவரை இரைதேடுவதும்

சலிப்பே இல்லாத உழைப்பு
இதைக் கண்டுணர்ந்தபோது 
செய்ததையே திரும்பத்
திரும்பச் செய்வதில்
எனக்கு இருந்த சலிப்பு
தடம் தெரியாமல் மறைந்தது வியப்பு
நன்கு புரிந்தது உழைப்பின் சிறப்பு

அவன் போல்

நான் பல் துலக்கும் நேரம்
பகலவன் எழுந்தான்
அவனை என் கண் கண்டபோது
புத்துணர்ச்சி தந்தான்

யார் என்ன சொன்னால் என்ன ?
காலை எழுவதும் பின் மாலை மறைவதும்
தன்னியல்பாகக் கொண்டான்
பகலினை செய்தான்
இவ்வுலகிற்கே
 சுடரொளியைத் தந்தான்.

அவன்போல் 
பிரகாசிக்க வேண்டும்
மறைந்தால் இவ்வுலகமே 
அதை உணர வேண்டும்.
பலனேதும் கருதாமல்
பிறருக்குப் பல நன்மை 
செய்ய வேண்டும்.

அவர் வாங்கிய ஒரே லஞ்சம்

சங்கரன் அன்று ஆஸ்பத்திரியிலிருந்து  டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பும் நாள்.

கிட்டத்தட்ட மூன்று மாத காலம் அந்தத் தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி தன் இருதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 80, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.

 நல்ல முறையில் உடல் தேறி இருந்தாலும் அவர் மனதுக்குள் ஒரு பெரும் கவலை. அது தன் மருத்துவச் செலவைப் பற்றித் தான். மருத்துவ காப்பீடு வைத்திருந்தும், தன் ஒரே மகன் நல்ல நிலையிலிருந்தும் தனக்கான செலவுகளைத் தன் சேமிப்பிலிருந்தே சமாளித்துவிட வேண்டும் என்று விரும்பினார். தன் சேமிப்பு அதற்குப் போதுமா ? என்ற ஐயம் அவர் மனதில்.

அந்த ஆஸ்பத்திரி சற்று வினோதமாகத்  தெரிந்தது அவருக்கு. மூன்று மாதம் அவரை அங்குத் தங்க வைத்து இருமுறை  அறுவை சிகிச்சை செய்தும் அந்நாள்வரை ஒரு பைசா கூட அவரிடமிருந்து வசூலிக்கவில்லை.

பலமுறை அவர் அதைப் பற்றிக் கேட்டும்
டிஸ்சார்ஜ்  ஆகும்போது பார்த்துக்கொள்ளலாலாம் என்று  அந்தத் தலைமை மருத்துவர் செல்வன் கூறிவிட்டார். அவர்தான் அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளரும் கூட.

சங்கரனின் மனைவி அவர் அருகில் நிற்க அவருடைய மகன் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்  ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த ஆஸ்பத்திரியின் ஊழியர் ஒருவர் ஒரு உறையை  எடுத்து வந்து சங்கரனிடம் கொடுத்தார்.

அதை வாங்கிய சங்கரனின் கை நடுங்கியது. அவருக்கு அதைத் திறந்து பார்க்கும் தைரியம் இல்லை. மருத்துவக் கட்டணம் எவ்வளவாக இருக்கும் என்ற பயம். தன் மறைந்த தாயை நினைத்து பிரார்த்தித்தபடி தன் மனைவியிடம் அதைக் கொடுத்துத் திறக்கச் சொன்னார்.

அதைப் பிரித்துப் படித்த சங்கரனின் மனைவி குழப்பம் அடைந்தார், அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அதைப் பார்த்த சங்கரன் பொறுமை இழந்து  அந்த உறையை அவசரமாகப் பிடுங்கி படிக்கல்லானார்.

” ஐயா, தாங்கள் செய்த உதவியை எப்படி நான் மறப்பேன். உங்களால் தான் நான்  இன்று ஒரு மருத்துவர். தங்களுக்கு மருத்துவ உதவி செய்ய ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. உங்களைப் போல நல்ல மனம் படைத்தவரிடம் எப்படி நான் பணம்  வாங்க முடியும். என் வாழ்நாள் முழுவதும் நான் தான் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன்.
நல்லபடியாக வீடு சென்று ஓய்வு எடுங்கள். விரைவில்   உங்களை வீட்டில் வந்து சந்திக்கிறேன்.

நன்றி
மருத்துவர் செல்வன்
S/o திரு. ராமநாதன் (சிவகாசி)”

இதைப் படித்த சங்கரனின் கண்களிலிருந்து நீர் வடிந்தது. ராமநாதன் (சிவகாசி)  என்ற பெயர் பல நினைவலைகளை அவருக்குள்
 எழுப்பியது. 

தன் கண்களை மூடியவாறு அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தார். அவர் மனதில் இருபது வருடங்களுக்கு முன் சிவகாசியில் நடந்த சம்பவம் திரைப்படமாக ஓடியது.

சங்கரன் தன் வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு  ஒரு வாரம் முன் ராமநாதன் ஒரு வேலை  நிமிர்த்தமாக அவரைச் சந்திக்க வந்திருந்தார்.

சங்கரன்  அப்போது  அந்தப் பகுதியின் மின்சாரத் துறையின் தலைமைப் பொறுப்பிலிருந்தார்.  ஊழல் மிகுந்த அத்துறையில் மிகவும் நேர்மையாக இருந்த அபூர்வ வெகு சிலரில்  அவரும் ஒருவர். 

 ராமநாதனும் மிக நல்லவர், நேர்மையானவர்  சிவகாசியில்  ஒரு  பெரிய  தொழில்  குழுமத்தின் –  சன்லைட் ஃபயர் வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட நிறுவனத்தின் மேலாளர். அந்த நிறுவனத்தின் புதிய  தொழிற்சாலைகளின்  மின் இணைப்பிற்காக  அடிக்கடி  சங்கரன் அவர்களை அவர் சந்திப்பதுண்டு.  இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது.
அப்படி ஒருநாள் ராமநாதன் சங்கரனைச் சந்தித்தபோது

“என்ன ராமநாதன் எப்படி இருக்கிறீர்கள்? ” என்று சங்கரன் கேட்க 

“இருக்கேன் சார்”  என்றார் ராமநாதன்

” என்னாச்சு ராமநாதன் பதில்ல ஒரு புத்துயிர்  இல்லையே”

” உங்ககிட்ட சொல்கிறதுக்கு என்ன சார். பையன் மருத்துவம் படித்து டாக்டர்  ஆகவேண்டுமென்று நிறைய ஆசைப் படுகிறான், பிளஸ் 2 ல நல்லா தான்  படிச்சான் நல்ல மதிப்பெண் எடுத்தான் இருந்தும் 0.5% குறைவா  இருந்ததினால்  அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காமல்  போய்டுச்சு ” என்றார் ராமநாதன்

“அதனாலென்ன ராமநாதன் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்த்து விட வேண்டியதுதானே. உங்கள் முதலாளி திரு. சொக்கலிங்கம் அவர்களே இரண்டு மருத்துவக் கல்லூரியின் சொந்தக்காரர் ஆயிற்றே. நீங்கள்தான் இந்தக் குழுமத்தில் ஏறத்தாழ முப்பது வருடமாக வேலை செய்து இருக்கிறீர்கள் இந்தக் குழுமத்தின் வளர்ச்சியில் உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. நீங்கள் ஒரு மருத்துவ சீட்டு கேட்டால் சொக்கலிங்கம் மறுக்கவா போகிறார்” 

” சார் நானும் அப்படித்தான்  நினைத்து  எங்க முதலாளியிடம் போய்க் கேட்டேன்.  நம்ம பழக்கம் வேற தொழில் வேற.  மத்தவங்களிடம்  75 லட்சம்  வாங்குகிறேன் ஒரு சீட்டுக்கு. உங்களுக்கு வேண்டுமென்றால் 60 லட்சத்துக்கு முடிக்கலாம். போய்ப் பணத்துக்கு  ஏற்பாடு பண்ணுங்கள் என்று கறாரா சொல்லிவிட்டார்” என்றார் ராமநாதன் வருத்தத்துடன்.

ஒரு நிமிடம் யோசித்தார் சங்கரன். தான் ஓய்வு பெறுவதற்குள் ராமநாதனுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

” ராமநாதன்  நீங்க எதற்கும்  கவலைப்படாதீர்கள் போய்யிட்டு  நாளைக்கு வாங்க   என்ன பண்றதுன்னு  யோசித்து வைக்கிறேன்” என்று கூறி ராமநாதனை  வழியனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் தன்  அலுவலகத்திலிருந்தபோது  ராமநாதனைச் சொக்கலிங்கம் தன் அறைக்கு வருமாறு அழைத்தார்.

” அந்தச் சங்கரன் ரொம்ப நல்ல மனுஷன் நினைத்தேன் ஆனால் நேற்று  சாயந்தரம் என்னைச் சந்தித்து நம் புதிய தொழிற்சாலைகளின் மின் இணைப்புக்கு லஞ்சமாக 60 லட்சம் ரூபாய் பணம் கேட்கிறார். தான் ஓய்வு பெறுவதற்கு முன் எல்லா  ஒப்புதலையும்  அளிப்பதாகக்  கூறுகிறார். ஓய்வு பெறும் நேரத்தில் கொஞ்சம் காச சேர்க்க ஆசைப்படுகிறார்.
நான் யோசித்துப் பார்த்தேன் நமக்குக் காசு கொடுத்து வேலை வாங்குவது ஒன்றும் புதிதில்லை நமக்கு மின்னிணைப்பு  தான் முக்கியம். அவர் வேறு யாரையும்  நம்பத் தயாராக இல்லை உங்களிடம் 60 லட்ச ரூபாய்  கொடுத்தனுப்பச்  சொல்லியிருக்கிறார். கேசியர் கிட்ட  சொல்லிவிட்டு பணத்தை வாங்கிட்டு  போய்க் கொடுத்துக் காரியத்தை முடித்து விடுங்கள்” என்று ஆணையிட்டார் சொக்கலிங்கம்.

ராமநாதனுக்கு நம்பமுடியவில்லை சங்கரனா இப்படி ? என்று குழப்பம் அடைந்தார்

இருந்தும் 60 லட்சத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு சங்கரனைச் சந்தித்தார்.
” என்ன 60 லட்சம் வந்துடுச்சா ?” என்று கேட்டார் சங்கரன்

” பையில இருக்கிறது” என்றார் ராமநாதன்

” அதை அப்படியே கொண்டு போய்க் கல்லூரியில் கட்டிவிட்டு உங்கள் 
பையனுக்கு மருத்துவ சீட்டு  வாங்கிடுங்க. உங்கள் புதிய தொழிற்சாலை மின் இணைப்புக்கான ஆணையை நான் ஏற்கனவே கையொப்பமிட்டு விட்டேன். அதையும் வாங்கிக்கொள்ளுங்கள். உங்கள் பையனுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத்  தெரிவித்து விடுங்கள். எப்படி அவங்க பணத்தை எடுத்து  அவங்களுக்கே கொடுத்த சீட்டு  வாங்கிட்டோமல்ல ” என்று முடித்தார் சங்கரன்

இருவரும் சிரித்தனர்.

சங்கரன் தன் வாழ்நாளில் வாங்கிய அந்த ஒரே ஒரு லஞ்சத்தினால் தான் இன்று செல்வன் மருத்துவராக இருக்கிறார்.

வாழ்க்கை

நடப்பதெல்லாம் நன்மைக்கே
நடந்தால் அனைத்தும் கடந்து போகுமே

பின்னோக்கி பார் தவறில்லை
ஆனால் முன்னோக்கி நட

ஒரு முடிவு தான்
மற்றொன்றின் ஆரம்பம்

ஒரு கதவு சாத்தினால் என்ன?
பல கதவுகள் உண்டு இவ்வுலகில்

கடந்த காலம் எதிர் காலத்தை நிர்ணயிப்பதில்லை

உன் எதிர்காலம் 
அது இன்னும் உன் கையில்
இந்நொடி முடிவு செய்
அதற்காகத் தொடர் முயற்சி செய்
வேண்டியதைக் கேள் இயற்கையிடம்
பத்தில் எட்டு வந்து சேரும் உன்னிடம்

உன்னை நீ எதிர்க்காதே
எப்பொழுதும் தன்னம்பிக்கையை இழக்காதே
மனம் தளர்ந்து நிற்காதே

வாழ்க்கை எது முன்னோக்கிய பயணம்
பின்னடைவுகள் வந்தாலும்
பின்னோக்கிய தல்ல

நடப்பதெல்லாம் நன்மைக்கே
என்றும் நடப்பதை நிறுத்தாதே

காற்று

சிறுகதை


12.12.2065


அந்த வளைவில் கார் நின்றது. அங்கு ஒரு விதமான அமைதி. பசுமை சூழ்ந்த மலை வனம். அவன் சுற்றும் முற்றும் பார்த்தான்அங்கு வேறு யாரும் இல்லை. 
மறுபடியும் வாகனத்தில் உள்ளே இருந்தவாறே கேமராக்கள் ஏதாவது பொருத்தப்பட்டு இருக்கிறதா என்று பார்த்தான் அப்படி எதுவும் அவன் கண்ணில் படவில்லை.
மிகக் கவனமாகத் தன் மூக்கில் பொருத்தியிருந்த கருவியைக் கழட்டி வைத்தான். மெதுவாகக் கார் ஜன்னல் கண்ணாடியைக் கீழே இறக்கினான். தூய குளிர்காற்று அவனைத் தாக்கியது. தன்னை மறந்து  அந்தக் காற்றை ஆனந்தமாகச் சுவாசித்தான்.
சிறிது நேரம் கழித்து தன் கார் ஜன்னல் கண்ணாடியை மீண்டும் உயர்த்திவிட்டு அந்தக் கருவியைத் தன் முக்கில் பொருத்திக் கொண்டு மலையடிவாரத்தில் உள்ள தன் வீட்டை நோக்கி காரைச் செலுத்தினான். 
யாருக்கும் தெரியாமல் இந்த இடத்திற்கு மாதம் இருமுறையாவது அவன் வருவதுண்டு ஏனென்றால் இங்கு மட்டும்தான் சுவாசிக்கும் காற்று இலவசம் யாருக்கும் தெரியாது அதைச் செய்வதால்.

பெண்ணின்றி வேறேது அழகு ?

மேலிருந்து மழைத்துளிகள்
கீழ் வந்தபோது
அகம் மகிழ்ந்து அதை வரவேற்றாள் மாது

தரை தொடும் முன்னே சில துளிகள்
பாவையைத் தொட்டு,
அவள்மேல் பட்டு
அது மகிழ்ந்து
பின் பூமியிலே விழுந்து
கடல் நாடி
உயிர்பெற்று ஓட

சிறு தொலைவில்
குடைக்குள்ளே நான் நின்று
அதைக்கண்டு வியந்து
என்னை மறந்து போது
நான் உணர்ந்தேன்

மழை நீரின்றி அமையாது உலகு
பெண்ணின்றி இவ்வுலகில் வேறேது அழகு ?

வந்துபோகும் இவ்வுலகில்

வந்துபோகும் இவ்வுலகில்
வருவதைக் கண்டு மயங்காதே!
போவதைக் கண்டு கலங்காதே!

வருவதும் போவதும் உன் கர்மவினை
அது உன் விதி 
நிர்ணயிக்கிறது அது உன் வழி என்பார்
இது என்ன நியாயம் ?
நாம் அறியா நம் முற்பிறவி
அதனால் எப்படி இப்பிறவி ?
இது என் கேள்வி

விடைகாண என்னுள் நடந்தேன்
என் மனதை அடைந்தேன்
அசையாமல் நின்றேன்
வந்து போனது பல எண்ணங்கள்
ஆழமாய் சிந்தித்தேன்
விடையைச் சந்தித்தேன்

அவ்விடை இதுதான்
சமநிலையில் நம் மனம் நின்று 
நம் எண்ணங்களை நாம் வென்று
வருவதையும் போவதையும் 
சமமாக நாம் கண்டால்
பிறகென்ன
வருவதைக் கண்டு மயங்கமாட்டோம்
 போவதைக் கண்டு கலங்க மாட்டோம்

புத்தகம்

தினம் ஒரு புத்தகம் படிக்க வேண்டும்
கையில் எடுத்தவுடன் அதை முடிக்க வேண்டும்

படித்த அனைத்தும் புரிய வேண்டும்
புரிந்த அனைத்தையும் பகுத்தறிய வேண்டும்
.
பகுத்தறிந்ததைச் செயல்படுத்த வேண்டும்
செயலின் அனுபவத்தை உள்வாங்க வேண்டும்

பெற்ற அனுபவத்தைப் பிறருடன் பகிர வேண்டும்
வாசிப்பின் அவசியத்தை அனைவருக்கும் உணர்த்த வேண்டும்

அவர்களின் அனுபவங்களும் புது புத்தகமாக வர வேண்டும்
அவை அனைத்தும் நான் படித்து
புத்தம் புது உலகைக் காண வேண்டும்